உற்பத்தி செலவு அதிகரிப்பால், சாயமிடும் கட்டணம் 20 சதவீதம் உயர்கிறது
- Repoter 11
- 04 Dec, 2025
விறகு விலை உயர்வு, மின் கட்டணம் உள்பட உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், வரும் ஜன. 1 முதல், சாயமிடும் கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிலின் முதுகெலும்பாக இருப்பது சாயத்தொழில். நாட்டில் வேறு எங்கும் இல்லாத, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை, இங்குள்ள சாய ஆலைகள் செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, 350 சாய ஆலைகள் இணைந்து,
18 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றி வருகின்றன. கடந்த, 2011ல் இருந்து, சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதிநவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மின் செலவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும், 12 கோடி லிட்டர் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
குறிப்பாக, 10 கோடி லிட்டரை, மீண்டும் சுத்தமான தண்ணீராக
மாற்றி, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் உறிஞ்சி எடுப்பது வெகுவாக குறைந்துள்ளது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம், இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதது. இருப்பினும், சாய ஆலைகள், கடும் பொருட்செலவில் மேற்கொண்டு வருகின்றனர். பாய்லர் பிரிவில், ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் விறகு எரிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, சுத்திகரிப்பு செலவு, ஆயிரம் லிட்டருக்கு, 280-350 ரூபாய் செலவாகிறது. ஏற்றுமதி நிறுவனங்கள், தங்கள் பிராசசிங் நிறுவனங்களும் தரச்சான்று பெற வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், சர்வதேச தரச்சான்று நிறுவனங்களில், தரச்சான்று பெற்று, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. மொத்த உற்பத்தி செலவில், 40 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் ஏற்படுகிறது என்று, சாய ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால், ஜனவரி. 1 முதல் சாயமிடும் கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று சாய ஆலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர், காந்திராஜன் கூறியதாவது, தற்போதைய காலகட்டத்தில், தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது; சாய ஆலைகளில் பணியாற்ற யாரும் முன்வருவதில்லை. இதனால், அதிக சம்பளம் கொடுத்து தொழிலாளர்களை நியமிக்கிறோம். சாயம் மற்றும் கெமிக்கல் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. விறகு விலை, ஒரு டன், 7 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மின் கட்டணமும், ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. தரச்சான்று பெறுவதற்கான செலவும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில், நிர்வாகக் குழுவில், இதுதொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய கட்டணத்தை, 20 சதவீதம் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும்
ஜனவரி 1 முதல், சாயமிடும் கட்டணம், நடைமுறையில் இருந்து, 20 சதவீதம் உயர்த்தப்படும். பின்னலாடை தொழில் சார்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், கட்டண உயர்வுக்கு ஆதரவு
அளிக்க வேண்டும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

